என்கவுண்டர் 1

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
98
1
18
InShot_20250503_202019023.jpg

என்கவுண்டர் 1

அந்த வயதானவர் காலிங் பெல்லை அழுத்த டேவிட் வெளியே வந்து பார்த்தான்.

கேட்டைத் திறக்க உள்ளே நுழைந்தார்.

"யார் வேணும்?"

"அசோக் சாரைப் பார்க்கணும்"

"உள்ள வாங்க"

அவர் உள்ளே வந்தார்.

"உட்காருங்க அசோக் வருவார்" சொன்ன டேவிட் அசோக் எண்ணுக்கு அழைத்தான்.

"சொல்லு டேவிட்" டெடி பேரை விலை பேசிக் கொண்டிருந்த அசோக் டேவிட்டிடம் கேட்டான்.

"உன்னப் பார்க்க இங்க ஒருத்தர் வந்திருக்காரு. "

"யாரு என்னனு கேக்கலையா?"

"இல்ல ஒரு மாதிரி சோகமா இருக்கார்"

"சரி அரை மணி நேரத்துல வர்றேன்"

"ஓகே அசோக்"

சொன்ன டேவிட் அவரிடம் கேட்டான்.

"ஐயா டீ காபி எதுவும் சாப்பிடறீங்களா?"

"வேண்டாம் தம்பி"

"ம்"

திவ்யா வெளியில் வந்தாள்.

"அசோக்கு கால் பண்ணியா ?"

"ம்"

"எங்கே?"

"அரை மணி நேரத்தில் வந்திடுவான்"

வந்தவரை உற்று கவனித்த திவ்யா டேவிட்டை அழைத்தாள்.

அவரிடம் இருந்து டேவிட் சற்று தள்ளி வர

"டேவிட் இவரை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்" என்றாள்.

"எங்கே?"

"இரு ஒரு நிமிஷம்" சொன்னவள் மிக தீவிரமாக யோசித்தாள்.

"டேவிட் இரண்டு நாள் முன்னாடி டிவி ல இவர் பேசினார்"

"இவரா? என்ன பேசினார்?"

"அதான் இவரோட பையன என்கவுண்டர் பண்ணிட்டாங்களே போலீஸக் கொன்னுட்டாங்கன்னு"

திவ்யா சொல்ல டேவிட் ஆச்சரியமாய் பார்த்தான்.

"அவரா இவர்?"

"ஆமா"

"அவர் எதுக்கு இங்க வந்திருக்காரு ?"

"யாருக்குத் தெரியும்?"

அப்போது அசோக் வர டாமி அசோக்கிடம் ஓடியது. அதன் தலையை பாசமாய் தடவிய அசோக் அமர்ந்திருந்தவரை ஏறிட்டான்.

உள்ளே அழைத்தான்.

தன் சேரில் அமர்ந்த அசோக் எதிரில் அமர்ந்தவரைப் பார்த்தான்.

"சொல்லுங்க"

"அசோக் சார்"

"நான்தான் சொல்லுங்க"

"என்னோட பேரு மூர்த்தி. என்னோட பையன் பேரு குட்டி"

"ம்"

"என் பையன போலீஸ் என்கவுண்டர் பண்ணிட்டாங்க"

அவர் சொல்ல அசோக் அதிர்ச்சியாய் பார்த்தான்.

"இப்ப ரீசண்டா ...?"

"ஆமா"

"போலீச கொலை பண்ண கேஸ்ல ..."

"சார் என்னோட பையனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"

"என்ன சொல்றீங்க?"

"அவங்க சொன்ன கொலை நடந்தப்ப என் பையன் என் கூடத்தான் இருந்தான். "

"அதுக்கு எவிடென்ஸ் ஏதாவது இருக்கா?"

" சிசிடிவி கேமரால இருக்கான். அன்னைக்கு எங்க சொந்தக்கார வீட்டுப் பொண்ணுக்கு வளைகாப்பு. வீடியோ எடுத்தாங்க அதுலயும் இருக்கான் "

" ம்"

"என்னோட பையன் அந்த போலீசைக் கொலை பண்ணல. ஆனா அவங்க வேணும்னு என்னோட பையனை சிக்க வைச்சு என்கவுண்டர் பண்ணிட்டாங்க. "

"இப்ப நான் என்ன பண்ணனும் உங்களுக்கு ?"

"என்னோட பையன் கொலைகாரன் இல்லன்னு இந்த சமூகத்துக்குத் தெரியணும். தப்பா என்கவுண்டர் பண்ணதுக்கு இந்த கவர்மெண்ட் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும். அந்த போலீஸக் கொலை பண்ணது யாரு? யாரைக் காப்பாத்த என்னோட பையன பலி கொடுத்தாங்கன்னு எனக்குத் தெரியணும்."

"ம்"

"சார்"

"சொல்லுங்க"

"என்னோட பையன அவங்க கொன்னப்பவே நானும் தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவங்கள அடையாளம் காட்டணும்னு தோணுச்சு. எப்படின்னு யோசிச்சப்ப எங்கள மாதிரி பாவப்பட்டவங்களோட கடைசி நம்பிக்கை நீங்க தான் சார். என்னோட மகன் கொலைகாரன் இல்லன்னு இந்த சமூகம் தெரிஞ்சுகிறது உங்க கையிலதான் சார் இருக்கு. உங்களை நம்பி வந்திருக்கேன் சார்"

மூர்த்தி அசோக்கை இரு கையெடுத்து கும்பிட அசோக் அவரை ஏறிட்டான்.

"நீங்க கவலைப்படாதீங்க. "

சொன்ன அசோக்கை மூர்த்தி மகிழ்வாய் பார்த்தார்.

***

" அசோக் ஹியர்"

"என்ன உன்னை நீயே பெரிய ஆளுன்னு நினைச்சுட்டிருக்கியா?"

"யார் பேசறீங்கன்னு சொல்ல முடியுமா?"

"நான் யாருன்னு முக்கியம் இல்ல. நான் சொல்லப்போற விஷயம் தான் முக்கியம்."

"சரி என்ன விஷயம்? சொல்லுங்க"

"குட்டியோட என்கவுண்டர் கேஸ் நீ எடுத்துக்கக் கூடாது"

"ஏன்?"

"உன்னோட நல்லதுக்கு சொல்றேன்"

"தேங்க்ஸ்"

"என்ன சொல்ற?"

"எனக்கு நல்லது நெனச்ச உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டேனே?"

"குட்டியோட கேஸ் நீ எடுத்துக்கக் கூடாது "

"இந்த கேஸ் எடுக்கலாமா வேணாமான்னு யோசிச்சேன். ஆனா நீங்க போன் பண்ண உடனே தான் தெரியுது."

"என்ன ?"

"இந்த ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும் போல. "

"அப்படின்னா...?"

"சுவாரஸ்யமான ஆட்டத்தை அசோக் டீம் எப்பவுமே ஆடாம இருக்காது.."

"அப்ப நீ கடுமையான விளைவை சந்திக்கப்போறே"

"உன்னோட ஆசிர்வாதத்துக்கு நன்றி"

***

பி1 போலீஸ் ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் தாமோதரன் தன்முன் அமர்ந்த அசோக்கை ஏறிட்டார்.

"சொல்லுங்க"

"குட்டி என்கவுண்டர் பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும்"

"அதுல என்ன தெரியணும் உங்களுக்கு ?"

"குட்டிய எங்கவச்சு என்கவுண்டர் பண்ணாங்க எந்த சூழ்நிலையில அது நடந்துச்சு?"

"அந்த டீம்ல மொத்தம் நாலு பேர் . இன்ஸ்பெக்டர் தீனதயாள் சப் இன்ஸ்பெக்டர் நகுலன் ரெண்டு கான்ஸ்டபிள் "

"அவங்க எந்த ஸ்டேஷன்ல இருக்காங்க? கான்டாக்ட் நம்பர்ஸ் கிடைக்குமா?"

"சப் இன்ஸ்பெக்டர் நகுலனோட நம்பர் என்கிட்ட இருக்கு. நீங்க அவருக்கு கான்டாக்ட் பண்ணிப்பாருங்க" சொன்ன இன்ஸ்பெக்டர் தாமோதரன் தன் மொபைலை எடுத்து நகுலன் நம்பரை அசோக்கிற்கு அனுப்பினார்.

"ஓகே சார் தேங்க்யூ"

அசோக் எழுந்து வெளியே வந்தான். சாலையின் மறுபுறம் ஒருவன் தன்னையே பார்ப்பதாக உணர்ந்த அசோக் சட்டென்று அந்தப்பக்கம் பார்க்க அதுவரை அசோக் மீது பார்வையைப் பதித்த அவன் அவசரமாய் அங்கிருந்த ஆர்யாஸ் ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

அசோக் தன் மொபைலை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் நகுலனுக்கு அழைத்தான்.

ரிங் போனது .எடுக்கப்பட்டது.

"ஹலோ"

"சப் இன்ஸ்பெக்டர் மிஸ்டர் நகுலன் ?"

"யெஸ்"

"நான் அசோக்"

மறுமுனையில் நகுலனின் குரல் உற்சாகமானது.

"சொல்லுங்க சார்"

"நான் உங்களை நேரில் பார்க்கணும்"

"சொல்லுங்க சார் எங்க பார்க்கலாம்?"

"இப்ப அரசரடில இருக்கேன்"

"அப்போ ஒன்னு பண்ணுங்க இன்னும் அரை மணி நேரத்துல அங்க வர்றேன்"

"ஒகே" சொன்னா அசோக் சுற்று முற்றும் பார்த்தான். என்ன பண்ணலாம் என்று யோசித்தவன் தன் எதிரில் இருந்த ஆர்யாஸ் ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

***

ஏற்கனவே ஹோட்டலுக்குள் நுழைந்தவன் அசோக்கை அங்கே பார்த்ததும் பதட்டமானான். தன் மொபைலை எடுத்து அழைத்தான்.

"சார்"

"என்ன வெங்கட் சொல்லு"

"அந்த அசோக் இங்கதான் இருக்கான்"

"நீ அவன் மேல ஒரு கண் வை. அவன் என்ன பண்றான்னு அவனுக்குத் தெரியாம ஃபாலோ பண்ணு. அப்பப்ப எனக்கு தகவல் கொடுத்துட்டே இரு. கவனம் அவனோட பார்வையில் நீ மாட்டிக்கக் கூடாது"

"சரிங்க சார்" சொன்ன வெங்கட் இயல்பாக இருப்பது போல் நடித்தான்.

"பேரர்" அழைத்தான்.

"சார்"

"பில் கொடுங்க"

பேரர் பில் எடுத்துக் கொண்டு வர பணத்தை வைத்து விட்டு வெளியில் வந்தான்.

அசோக் வருவதற்கு காத்திருந்தான்.

சப் இன்ஸ்பெக்டர் நகுலன் ஹோட்டலுக்குள் நுழைந்தார். அசோக்கைப் பார்வையில் வாங்கிய நகுலன் அசோக் எதிரில் அமர்ந்தார்.

"ஹலோ சார் ஐ அம் நகுலன்"

"நைஸ் மீட்டிங் யூ"

"சொல்லுங்க சார்"

"குட்டி என்கவுண்டர் விஷயமா கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும்" அசோக் சொன்ன அந்த வினாடி நகுலன் முகம் மாறியதை அசோக் கவனித்தான். சுதாரித்துக் கொண்ட நகுலன் கேட்டார்.

"என்ன டீட்டெயில்ஸ் வேணும்?"

"உங்க டிபார்ட்மெண்ட்ல கான்ஸ்டபிள் கந்தவேல் கொலை செய்யப்பட்டார் இல்லையா?"

"ஆமா சார்"

"அதை செஞ்சது யாரு?"

"குட்டி தான்"

"குட்டி ஒரு ரவுடியா?"

"ஆமா சார்"

"ஏதாவது கேஸ் குட்டி மேல ஃபைல் ஆயிருக்கா? ஐ மீன் கான்ஸ்டபிள் கொலையாகறதுக்கு முன்னாடி"

"திருட்டு கேஸ் இருக்கு"

"ம் மர்டர் இல்லன்னா அட்டெம்ப்ட் மர்டர் இந்த மாதிரி?"

"இல்ல சார்"

"குட்டிதான் கான்ஸ்டபிளக் கொன்னாருன்னு எப்படி சொல்றீங்க?"

"எவிடென்ஸ் இருக்கு சார்"

"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?"

"சொல்லுங்க சார்"

"கான்ஸ்டபிள் மர்டர் நடந்த நாள்ல குட்டி ஒரு மேரேஜ் ரிசப்சன்ல இருந்திருக்கான். அதுக்கான எவிடன்ஸ் இருக்கு"

அசோக் சொல்ல நகுலன் வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

"மிஸ்டர் நகுலன் "

" சார்"

"குட்டி தான் கொலை செஞ்சான்னு எவிடன்ஸ் இருக்கிறதா சொன்னீங்க அந்த எவிடன்ஸ் என்னன்னு சொல்ல முடியுமா?"

"சார் அது வந்து"

"ஏன் தயங்கறீங்க? சொல்லுங்க"

அசோக் கேட்க நகுலன் மௌனமாய் இருந்தார்.

"ஓகே மிஸ்டர் நகுலன் உங்க தயக்கமே எனக்கு பல விஷயங்களை புரிய வைக்குது. இதுக்குப் பின்னாடி என்னென்ன இருக்குன்னு நான் பார்த்துக்கறேன். தேங்க்யூ ஃபார் யுவர் கைன்ட் கோ ஆபரேஷன் "

அசோக் சொல்ல நகுலன் எழுந்தார்.

***

"அப்படின்னா குட்டி கொலை செய்யலையா?" டேவிட் கேட்க அசோக் மறுப்பாய் தலையசைத்தான்.

"இல்ல"

"அப்ப நம்ம அடுத்த மூவ் என்ன?"

"கான்ஸ்டபிளை கொன்னது யாருன்னு கண்டுபிடிக்கணும்"

"எப்படி?"

"கான்ஸ்டபிள் மர்டர் கேஸ் இன்வெஸ்டிகேட் பண்ணது யாருன்னு தெரிஞ்சுக்க. "

"அது நமக்கு யூஸ் ஆகுமா?"

"ஆகாது. அவர்கிட்ட நாம எந்த விஷயம் கேட்டாலும் சொல்ல மாட்டார். "

"அப்புறம் எப்படி?"

"அவரோட கான்டாக்ட்ஸ் யாருன்னு தெரிஞ்சுக்கணும். அவரோட கான்டாக்ட் ல இருக்கிற பிக் ஷாட் யாரோ ஒருத்தர் இந்த கொலையப் பண்ணியிருக்கலாம். அந்த கொலைகாரனை காப்பாத்த இவர் வழக்கை குட்டி மேல திசை திருப்பியிருக்கலாம்"

"புரியுது"

"இது எல்லாமே நம்ம தியரிதான். இப்படித்தான் நடந்திருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா இப்படியும் நடந்திருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றேன்."

"ம்"

"இன்னொரு விஷயம் கூட கவனிக்கணும்"

"சொல்லு அசோக்"

"அந்த கான்ஸ்டபிள் மர்டர் கேஸ் இன்வெஸ்டிகேட் பண்ணவரோட பேங்க் அக்கவுண்ட்ஸ் கம்ப்ளீட்டா செக் பண்ணனும். "

"அப்படின்னா?"

"சமீபத்துல ஏதாவது ஒரு பல்க் அமௌன்ட் அவரோட ட்ரான்ஷாக்ஷன் ஹிஸ்டரியில் இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு"

"ஒருவேளை இல்லன்னா ?"

"அவர் ரொம்ப உஷார்னு அர்த்தம். அவரை இன்னும் கவனமா ஹேண்டில் பண்ணனும்" அசோக் சிரித்தபடி சொல்ல டேவிட் அந்த சிரிப்பில் இணைந்தான்.

***

"உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க?" டிஎஸ்பி சங்கரலிங்கம் டேவிட்டை ஏறிட்டார்.

"சார் ரீசண்டா ஒரு கான்ஸ்டபிள் மர்டர் கேஸ்"

"ஆமா சொல்லுங்க"

"அதை இன்வெஸ்டிகேட் பண்ணது யாருன்னு தெரிஞ்சா கொஞ்சம் உதவியா இருக்கும்"

"அது..." சற்று யோசித்த சங்கரலிங்கம் தொடர்ந்தார்.

"இன்ஸ்பெக்டர் மனோஜ்"

தொடரும்