ஒரு ரகசிய குற்றம் Final

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
98
1
18
நான் மிக சாவதானமாக, "சொல்றேன். அதுக்கு முன்பு, நீங்க என்னென்ன தகிடுதத்தம் பண்ணி இருக்கீங்கன்னு சொல்றேன்." என்று தொடர்ந்தேன்.



"முதல்ல ஒரு விஷயத்துல நீங்க தெளிவா இருக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டீங்க. அதாவது, நீரஜாவை கொலை பண்ணா நீங்க மாட்டிக்கக் கூடாது; நீங்கதான் நீரஜாவை கொன்னீங்கன்னு உங்க மாமனாருக்கு - நீரஜாவோட அப்பாவுக்கு - எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரியக் கூடாது. ஏன்னா, சொத்து பூராவும் கைவிட்டுப் போயிடும் ஒண்ணு; ரெண்டாவது, நீங்கதான் நீரஜாவை கொலை செய்தேன்னு தெரிஞ்சா பதினாலு வருஷம் ஜெயில் தண்டனை நிச்சயம்! அதனால, சுருதி சுத்தமா ஒரு திட்டம் தீட்டினீங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்க கம்பெனியில கிரேன் விழுந்து செத்துப் போன எத்திராஜோட போன் உங்க கிட்ட மாட்டிக்கிச்சி. முதல்ல நீங்க அதைப் பத்தி கவனக்குறைவாதான் இருந்திருக்கீங்க. கம்பெனியில உங்களுக்கு பிரச்சினை வந்தப்ப, சில பேரை மிரட்டறதுக்கு சில சமயம் அந்த போனை யூஸ் பண்ணீங்க. அதுல உங்களுக்கு வெற்றியும் கிடைச்சது."



நான் சொல்லச் சொல்ல, "என்னாய்யா கற்பனை வளம் உனக்கு?" என்றான் சுவாமிநாதன்.



"சரி, கற்பனையாவே இருக்கட்டும். கேளுங்க! திட்டம் தயாரான உடனே நீங்க என்ன பண்ணீங்க?"



"என்ன பண்ணேன்?"



"விக்ரம் பத்தி விசாரிக்க ஆரம்பிக்கிறீங்க."



"அவனைப் பத்தி நான் எதுக்கு விசாரிக்கணும்? அபத்தம்!"



"சரி, அபத்தம்! ஆனா, அந்த அபத்தத்தை நீங்க ஏன் செய்தீங்க?"



"அதையும் நீயே சொல்லிடு டிடெக்டிவ்!" என்றான் வெறுப்புடன் சுவாமிநாதன்.



"அவன்தானே உங்களோட துருப்புச் சீட்டு! ரம்மியில ஆட்டத்தை முடிக்கிறதுக்கு உங்களுக்குக் கிடைச்ச ஜோக்கர்தான் விக்ரம்! விக்ரம், ஒரு சாதாரண பையன். ஆனா, அழகானவன்; கொஞ்சம் பணத்தாசை பிடிச்சவன். நீரஜா கூட சேர்ந்து கொஞ்சம் பணம் பார்க்கலாமேன்னு உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு ஆசை இருந்திருக்கு. முதல்ல சாதாரணமா ஆரம்பிச்ச நீரஜாவுடனான நட்பை எப்படி காதலா மாத்தலாம்னு யோசிச்சு கிட்டு இருக்கிறப்ப, பழம் நழுவி பால்ல விழுந்தாப்ல நீங்க விக்ரமை போய் பார்க்கறீங்க? அவனோட அப்பா அம்மா எல்லாம் எங்கேயோ ஒரு கிராமத்துல இருக்காங்க. விக்ரம் மட்டும் இங்க தனியா ஒரு அபார்ட்மெண்ட்ல வாடகைக்கு இருக்கான். அவனைப் போய்ப் பார்த்து, டீல் பேசறீங்க!"



"கதை சுவாரஸ்யமா இருக்கு. மேல சொல்லு!"



"டீல்னா என்ன மாதிரியான டீல்? சொல்றேன். அது உங்களுக்குள்ள எப்படி வெளிப்படுதுன்னு சொல்றேன். உங்களுக்குள்ள ஒரு வக்கிரமான குரூரம் இருக்கு. யார் மேல? நீரஜா மேல! எதுக்காக? இந்த இடத்தில் கொஞ்சம் அந்தரங்கமான விஷயத்தை வெளிப்படையாத்தான் பேசியாகணும். எவ்வளவு நாகரீகமான வார்த்தைகள்ல பேச முடியுமோ, அந்த அளவுக்கு நாகரீகமான வார்த்தைகள்ல பேசறேன். பெட் ரூம்ல நீரஜாவை உங்களால திருப்திப்படுத்த முடியலை…"



சுவாமிநாதன் சிரித்தான். சிரிப்பில் அழுத்தமான கோபம் இருந்தது.



"சிரிக்காதீங்க சுவாமிநாதன்! உண்மையைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்."



"சரி, சொல்லு!"



"அதனால, உங்களை நீரஜா அலட்சியப்படுத்த ஆரம்பிக்கிறா. பல இரவுகள் நீரஜாவோட செக்ஸ் உணர்வுகள் தணிக்கப்படாமலேயே கழியுது. நீரஜா ஒரு மாதிரி விரக்தி நிலையில உங்களை அந்த மாதிரியான நேரத்துல வெறுக்கிறா. கோபத்தில் ஏதாவது சொல்லப் போய், அது உங்களுக்கு அவமானமா தெரியுது. உங்களை நீரஜா இன்ஸல்ட் பண்றதா நீங்க நினைக்கிறீங்க! அந்த அவமானத்தை உங்களால தாங்க முடியலை. காலம் பூரா அவளோட வாழ முடியாதுன்னு நினைக்கிறீங்க. ஸோ… அவளை உங்க வாழ்க்கையிலே இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறீங்க. அதுக்கு ஒரு பகடைக்காயா விக்ரமை பயன்படுத்தறீங்க. அதுக்காக விக்ரமை, விக்ரமோட அபார்ட்மெண்ட்ல போய்ப் பார்க்கறீங்க. பேசறீங்க. என்ன பேசறீங்க?"



"அபாரமான கற்பனை!" என்றான் சுவாமிநாதன். மீண்டும் தண்ணீர் எடுத்து குடித்தான். "எல்லாத்துக்கும் ஆதாரம் வேணும் இல்லையா?"



"அதெல்லாம் கடைசியில நீங்களே ஒத்துக்குவீங்க. நீங்க விக்ரமை பார்க்க வர்றேன் சொல்றீங்க. சுவாமிநாதன் எதுக்கு நம்மை பார்க்க வரணும்னு விக்ரம் யோசிக்கிறான். நீங்க விக்ரம் ரூமுக்கு போனதும், ரொம்ப கோபமா இருக்கிற மாதிரி, "இது உனக்கே நல்லா இருக்கா? நீரஜா யார் தெரியுமா? அவ ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா? நீ பெரிய இடத்துல கை வைக்க பார்க்கிறே! நான் நினைச்சா உன்னை இல்லாம பண்ணிடுவேன்" னு மிரட்றீங்க.



விக்ரம் எதுவும் புரியாம, "சார், நான் என்ன சார் பண்ணேன்?"னு கேக்கறான்.



"நீரஜாவை நீ லவ் பண்ணலையா?"ன்னு கேக்கறீங்க.



"அவன் இல்லை"ன்றான்.



"எல்லாம் எனக்குத் தெரியும். உனக்கு பணம்தானே வேணும்? நான் சொல்ற மாதிரி கேட்டா உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்"னு சொல்றீங்க.



"என்ன செய்யணும்?"ன்றான்.



"நீரஜாவை கொலை செய்யணும்"ங்கிறீங்க.



"சார்!"



"ஆமா, நீரஜாவை கொலை செய்யறதுக்கான திட்டம் என் கிட்ட இருக்கு. அது படி செய்தா நீயும் தப்பிக்கலாம். நானும் தப்பிக்கலாம். நீரஜாவும் உயிரோடு இருக்க மாட்டா."



விக்ரம் ரொம்ப நேரம் யோசிச்சுட்டு, "என்ன திட்டம்?"ன்றான்.



"நீரஜாவை உன் காதல் வலையில் விழ வைக்கணும்னு சொல்றீங்க!"



"என்ன சார் நீங்களே?"ன்னு கேக்கறான்.



"நீங்க பெட் ரூம்ல உங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களை சொல்றீங்க. உனக்கு ரெண்டு விதமான நன்மை இருக்குன்னு சொல்றீங்க! ஒண்ணு, நீரஜா உனக்குக் கிடைக்கிறா; அடுத்து, பணமும் கிடைக்குது''



"ஜெயிலும் கிடைக்கும் சார்!"ன்றான் விக்ரம்.



"உன் மேல பழி வரும். ஆனா, அதிலேயிருந்து உன்னைத் தப்பிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு!"



"எப்படி சார் தப்பிக்க முடியும்?"



நீங்க உங்க திட்டத்தைத் தெளிவா சொல்றீங்க. நீரஜா விக்ரமை காதலிக்கிறது; நீரஜாவை பிளாக் மெயில் பண்றது; அதே சமயம் நீரஜாவுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பறது; அவனே நீரஜாவை ஒரு டிடெக்டிவ் கிட்ட போகச் சொல்லி அட்வைஸ் பண்றது; ஒரு டிடெக்டிவை முன் வெச்சு, அவனோட ஒத்துழைப்போடு போன் நெம்பர் கண்டுபிடிக்கிறது… டிடெக்டிவ் ஒரு ஸ்ட்ராங்கான எவிடென்ஸா கடைசி வரைக்கும் கூட வருவான். ரூம் எடுக்கிறது, நீரஜாவை ரூமுக்கு வர வைக்கிறது, நீரஜா வந்த பிறகு, மறைச்சு எடுத்துட்டு போன கத்தியால, கழுத்துல ஒரே இழுப்பு இழுத்தா போதும்; அவளால கத்த கூட முடியாது. சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் நாடக பாணியில் போட்டுட்டு, ரூமுக்குள்ள யார் வர்றாங்க; யார் போறாங்கன்னு எல்லாரையும் குழப்பி, அந்த குழப்பத்துல கொலையை நேர்ல பார்த்த சாட்சி யாரும் இல்லைன்னு தப்பிக்க நினைச்சது; நீங்களும் தப்பிக்கணும்; விக்ரமும் தப்பிக்கணும். இப்படிப்பட்ட கேஸை சென்னையில இருந்து கணேஷ் வசந்தை கூப்பிட்டு, வாதாடா வெச்சு வெளியே வந்துடலாம்னு திட்டம். ஆனா, வசந்த் எல்லாரையும் தூக்கி சாப்பிடற ஆள்! அவர் கிட்ட போன்ல பேசும் போது, விக்ரம் கிட்ட ஏதோ விஷயம் இருக்கு. கேஸே குழப்பமா இருக்கு. நீங்க அவனைக் கண்காணிங்கன்னு சொன்னதும்தான் நான் விக்ரம் அபார்ட்மெண்டுக்குப் போய்த் தேடினா…"



நீளமாகப் பேசிவிட்டு, "எக்ஸ்கியூஸ்மீ!" என்று நானும் சிறிது தண்ணீர் பருகினேன்.



"அபார்ட்மெண்டுக்குப் போய் பார்த்தா, நீங்களும் விக்ரமும் பேசிய அத்தனை பேச்சையும் ஒரு டிஜிட்டல் கேமிராவுல விக்ரம் பதிவு பண்ணி பதுக்கி வெச்சிருக்கான்!"



நான் சொன்னதும், "என்ன? என்ன? எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி இருக்கானா?" என்று பதறினான் சுவாமிநாதன். அவனால் நம்ப முடியவில்லை. இது வரைக்கும் அவனிடம் இருந்த அத்தனை சக்தியும் வடிந்து போய்விட்டது.



"ஆமா சார்! நீங்க ஏமாத்தி விக்ரமை மாட்ட வெச்சுட்டா என்ன பண்றதுன்னு முன்னெச்சரிக்கையா ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கான்! இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, எனக்கு எந்த சந்தேகமும் வரக் கூடாதுன்னு ரொம்ப பெருந்தன்மையா என்னைக் கூப்பிட்டு, உங்க ஃபீஸ் எவ்வளவுன்னு கேட்டீங்க பாருங்க; அன்னிக்குதான் நீங்க என் கிட்ட மாட்டிக்கிட்டீங்க!"



சுவாமிநாதனும் தங்கரஜூம் புரியாமல் என்னைப் பார்த்தனர்.



"உங்க ரெண்டு பேருக்கும் புரியலை இல்லை? நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கும் போது, ஸ்டேஷன்ல இருந்து தங்கராஜூக்கு சுதர்சனம் போன் பண்ணினார், ஞாபகம் இருக்கா?"



தங்கராஜ் தலையாட்டினான்.



"அப்போ உங்க போன்ல இருக்கிற ரிங்டோன்தான் காட்டிக் கொடுத்துச்சு! அதே ரிங்டோன் நீரஜாவவை பிளாக் மெயில் பண்ணி பேசிட்டு இருக்கும் போது, நீங்க பக்கத்தில இருந்திருக்கணும். அப்பவும் உங்களுக்கு போன் வந்தது. அதுலேயும் அந்த ரிங்டோன் லேசா கேட்டது. அந்த செகண்ட் எனக்கு புரிய ஆரம்பிச்சுடுச்சு! இதுல இன்னொரு விஷயம், விக்ரம் பேர்ல புது சிம் கார்டு வாங்கி, அந்த நெம்பர்லே இருந்து போன் பண்ணி, அந்த போனை சிறுபிள்ளைத்தனமா ஒரு பையனை விட்டு திருட வெச்சு, எல்லாரையும் நம்ப வைக்க எவ்வளவு பாடுபட்டிருக்கீங்கன்னு தெரியுது! இவ்வளவு திட்டம் போட்ட நீங்க ஆரம்பத்துலேயே விக்ரம் அபார்ட்மெண்டுக்கு போய் அவன் கிட்ட பேசணும்னு நினைச்சது எவ்வளவு பெரிய தப்பு! நீங்க வர்றீங்கன்னு சொன்ன உடனே அவன் வீடியோவை ரெக்கார்ட் பண்ண தயார் நிலையில் இருந்ததை உங்களால கணிக்க முடியலை. ஸோ… கேம் ஓவர்! என்ன யாழினி எல்லாம் ரெக்கார்ட் பண்ணிகிட்டியா? போலாமா?"



நாங்கள் எழுந்து கொண்டோம். நான் திரும்பி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத சுவாமிநாதனை பார்த்து, "இதையெல்லாம் முதல்ல போலீஸ்ல சொல்லாம உங்க கிட்ட வந்து ஏன் சொன்னேன்னு நினைக்கிறீங்களா? நீரஜா சார்! நீரஜா ரொம்ப நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியுது. கூடவே இருந்த உங்களுக்குத் தெரியாம போயிடுச்சே! சரிதானே? என்ன, ஊம் சொல்றிங்களா? இல்ல, ஊஹூம் சொல்றீங்களா? பதினாலு வருஷம் உங்க கம்பெனிக்கு லீவ் போட்ருங்க!" சொல்லி விட்டு கனத்த மனதுடன் அந்த அறையை விட்டு நடந்தேன்.



(முற்றும்)
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் Final
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.