மலரினும் மெல்லியது காமம் 10

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
98
1
18
அந்த நேரத்தில் கணேஷை எதிர்பார்க்காத புவனா திகைத்தாலும் சுதாரித்துக் கொண்டு புன்னகைத்தாள்.

“வாங்க”

“ஸாரி இவ்வளவு காலையில வந்துட்டேன். நான் அவசர வேலையா சென்னை வரைக்கும் போக வேண்டியிருக்கு”

“சரிங்க”

“நேத்து நம்ம ஸ்கூல் ஹெட் மாஸ்டர் கிட்ட உங்களப் பத்தி பேசினேன். அப்பா அவரு ஒரு விஷயம் சொன்னார்”

“என்ன சொன்னார்?”

“வீக் ஸ்டுடண்ட்ஸ்க்கு டெய்லி சாயங்காலம் ஸ்பெசல் கிளாஸ் கொடுப்பாங்களாம். நீங்க கூட கலந்துக்கலாம்னு சொன்னார். எல்லா சப்ஜெக்டுக்கும் டீச்சர் சொல்லித்தர்றப்ப உங்களால புரிஞ்சுக்க முடியும்னு தோணுச்சு”

கணேஷ் சொல்ல புவனா அவனை நன்றியுடன் பார்த்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க. என்ன பண்றதுன்னு குழப்பமா இருந்துச்சு. உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு”

புவனா முகம் மலர்ந்து சொல்ல அவள் விழிகளைப் பார்த்த கணேஷ் தடுமாறினான்.

“எனக்கு எதுக்குங்க தேங்க்ஸ்? நல்லாப் படிங்க. எல்லா சப்ஜெக்ட் ம் பாஸ் பண்ணுங்க போதும் “ கணேஷ் சொல்ல புவனா நெகிழ்ந்தாள்.

“காபி எடுக்கட்டுமா?”

“வேண்டாங்க வீட்ல சாப்பிட்டுத்தான் வர்றேன்”

“ம்”

“சரிங்க இன்னிக்கு சாயங்காலத்தில் இருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகும் மறக்காம அட்டென்ட் பண்ணுங்க”

கணேஷ் சொல்ல புவனா தலையாட்டினாள்.

“சரிங்க”

அடுத்து என்ன பேசுவது என்று கணேஷ் தயங்கினான். அங்கே இருந்து உடனே சென்று விட வேண்டும். யாராவது பார்த்தால் புவனாவை தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று அவனுக்குத் தோன்றினாலும் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.

ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்க்க அவள் தன்னையே இமைக்காமல் பார்த்தது தெரிந்தது.

இது ஏதாவது தவறாகி விடுமோ என்று மனம் சஞ்சலப்பட்ட அதே வேளையில் நேசம் எவரிடத்தில் வந்தாலும் அது எப்போதும் தவறல்ல என்று அவனே உள்ளுக்குள் விவாதித்துக் கொண்டான்.

“அப்ப நான் வரட்டுங்களா?”

அவன் கேட்டது புவனாவிற்கு கவலையானது.

கனவில் மட்டும் வந்து தொந்தரவு செய்யாமல் நேரிலும் வந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு இப்போது சென்று வரட்டுமா என்று கேட்டால் என்ன நான் சொல்வது? என்னால் ஏதாவது சொல்லத்தான் முடியுமா? சொல்லக்கூடிய நிலையிலா நான் இருக்கிறேன்?

போக வேண்டாம் என்று சொன்னால் மட்டும் போகாமலா இருக்கப் போகிறாய்?

உள்ளே எண்ணம் ஓட அதே நேரத்தில் அவளை அவளே கடிந்து கொண்டாள்.

எதற்கு இப்படி ஒரு எண்ணம் உனக்கு? இது தவறல்லவா ? கணேஷ் பாவம் ஏதோ ஒரு அக்கறையில் உனக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டுமே தவிர அவரையே வேண்டும் என்று எண்ணுவது சுயநலம் இல்லையா?

நான் ஒன்றும் அவர் எனக்கு வேண்டும் என்று எண்ணவில்லை.

மறைக்காதே முதலில் உன்னிடம் நீ ஒப்புக்கொள்ளப் பழகு. வேறு யாரும் உன்னை குற்றப் படுத்த வேண்டாம் உன் செயல் உனக்கு சரியாகத் தெரிந்தால் அதை செய். தவறாகத் தெரிந்தால் அதை செய்யாதே. அவ்வளவுதான்.

நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. என் மனதில் கணேஷ் மீது ஒரு எண்ணம். அவ்வளவுதான். அதுவும் கணேஷ் மாதிரி ஒரு கணவன் எனக்கு ஏன் கிடைக்கவில்லை? என்பதுதான் என் கேள்வி. நான் என்ன தவறு செய்தேன்?

“என்னங்க” கணேஷ் அழைக்க கலைந்தாள்.

“சொல்லுங்க”

“நான் கிளம்பட்டுமா?”

“சரிங்க”

கணேசிடம் பேசிவிட்டு திரும்பியவள் வீட்டிற்கு செல்ல முயல அதிர்ந்தாள்.

அரவிந்த் அவளை கோணலாய் பார்த்தான்.

“யார்டி அவன்? இவ்வளவு காலையில உன்கிட்ட பேசிட்டுப் போறான். நீயும் என்னமோ அவனையே பார்த்துட்டு நின்னுட்டிருக்கே?”

“இன்னைக்கு சாயங்காலத்திலிருந்து நம்ம ஸ்கூல்ல கிளாஸ் நடக்குது நானும் வேணும்னா போய் கலந்துக்கலாம்னு சொல்லிட்டு போறாரு”

“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா?”

“புரியலங்க”

“நீ படிக்கப் போறேன்னு ஆரம்பிச்சே கண்டவனெல்லாம் வந்து உனக்கு அட்வைஸ் பண்ணுவான். ஹெல்ப் பண்றேன்னு சொல்லுவான். நீயும் நேரம் கெட்ட நேரத்துல பேசிட்டு இருப்பே. இந்த எழவுக்குத்தாண்டி நான் அன்னிக்கே சொன்னேன்?”

“இப்ப என்ன தப்பா நடந்துடுச்சுன்னு…”

“இதுக்கு மேல தப்பா நடக்கணுமா? இன்னும் என்ன தப்பா நடக்கணும்? சொல்லு. சொல்லுடி”

பைத்தியம் போல் ஆவேசமாக பேசியவனை இமைக்காமல் பார்த்தாள் புவனா.

“நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?”

“அப்படி என்ன கேக்கப் போறே?”

“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?”

“இல்ல”

“ஏன்?”

“யார் வந்து பேசினாலும் பல்ல இளிச்சுட்டுப் பேசறியே? அப்புறம் எப்படி உன்னை நம்பச் சொல்றே?”

“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லங்கிறதுக்காக நான் எப்பவுமே உங்க பின்னாடி நடந்து என்ன ப்ரூவ் பண்ணிட்டே இருக்க முடியாது”

“நீ எப்படி என் பின்னாடி வருவே? நீதான் எவன் பின்னாடியோ தானே போறே?”

“உங்களுக்கு இப்படி பேசறதுக்கு அசிங்கமா இல்லையா?”

“நடந்துக்கிற உனக்கு அசிங்கமா இல்ல. அதைப் பேசினா எனக்கு அசிங்கமா ?”

“ஏங்க காலங்கார்த்தால வெளியில வந்து இப்படி பேசிட்டிருக்காதீங்க. அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் கேட்டுடப் போறாங்க”

“கேட்கட்டும் எல்லாருக்கும் தெரியட்டும்”

“என்ன தெரியணும்?”

“உன்னோட பத்தினித்தனம்”

அரவிந்த் சொல்ல அப்பொழுது எதிர் வீட்டு கதவு திறந்து அவர் வெளியில் வந்தார்.

“ஏன்டா உனக்கு அறிவு இல்லையா?” அவர் கேட்க அரவிந்த் அவரை முறைத்தான்.

“என்னடா முறைக்கிறே? செவுனில விட்டா தல சுத்திட்டு கீழ விழுந்துடுவே. ராஸ்கல். நானும் பாரத்துட்டே இருக்கேன். இந்த பொண்ணா இருக்கறதால உன் கூட குடும்பம் நடத்துது. வேற எந்த பொண்ணா இருந்தாலும் உன் மூஞ்சில காறித் துப்பிட்டுப் போயிட்டே இருப்பா. “

அவர் சொல்ல அரவிந்த் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“ஊர்ல உலகத்துல அவனவன் பொண்ணு கிடைக்காம தவிச்சிட்டு இருக்கான். உன்ன மாதிரி பரதேசிகளுக்கெல்லாம் நல்ல பொண்ணு கிடைக்குது. போடா உள்ளே திரும்ப ஏதாவது சத்தம் போட்டேன்னு வை . என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்குவே”

அவர் சொல்ல அரவிந்த் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றான். புவனா அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்..

எதிர்வீட்டை கோபப்பார்வை பார்த்த அரவிந்த் புவனாவை நீண்ட நேரம் மௌனமாய் வெறித்தான்.

***

புவனாவிற்கு மாலை நேர வகுப்பு மிகவும் பிடித்திருந்தது. தனியாக படிக்கும் போது புரியாத கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்க மகிழ்ந்தாள். எப்படியும் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை மனதில் பிறந்தது.

மாலை நேர வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்லும் வழியில் நடந்தவளுக்கு எல்லை மாரியம்மன் கோவிலுக்குச் செல்லலாம் என்று தோன்றியது.

கோவில் இருக்கும் திசையில் நடந்தாள்.

ஊரின் எல்லையில் அந்த கோவில் அமைந்திருப்பதால் அதற்கு எல்லை மாரியம்மன் என்று பெயர்.

“அம்மா ரொம்ப சக்தி வாய்ந்தது. அம்மாக்கிட்ட யார் என்ன வேண்டிக் கேட்டாலும் கிடைக்கும்”

அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

மாரியம்மனிடம் நான் என்ன கேட்க ?

எனக்கு என்ன வேண்டும்?

எதுவும் வேண்டாம்.

எதுவும் வேண்டாமா?

வேண்டாம்.

நன்றாக யோசித்து சொல்.

வேண்டாம்.

கணேஷ் வேண்டாமா?

அது…

சொல். வேண்டாமா?

கணேஷ் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்.

அது பிறகு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்.

அவர் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை.

என்ன தகுதி வேண்டும்?

நான் திருமணம் ஆனவள்.

சரி

எனக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்து விட்டது

சரி

அவர் என்னைப்போல் அல்ல.

சரி

அதனால் என் சுயநலத்திற்காக அவர் வாழ்க்கையை நான் கேட்பது சற்றும் நியாயம் இல்லாத செயல்.

இருவரும் காதலித்தால் நியாயம் அநியாயம் என்று எங்கே வருகிறது? இரண்டு மனங்கள் விரும்பினால் ஒன்றாக வாழ வேண்டியது தான்.

இருவர் மட்டுமே வாழ்க்கையில் இருக்க முடியாது.

என்ன உளறல்?

இல்லை இது உண்மை.

எப்படி?

சமூகம் என்பது அனைவரும் சேர்ந்தது தான். அவரின் குடும்பம் என் குடும்பம் எல்லாமே தான். அனைவரையும் எதிர்த்து விட்டு இருவர் மட்டும் இணையும் போது மன அழுத்தம் இருவருக்கும் கூடும். ஏன் இணைந்தோம் என்று இருவரில் ஒருவர் யோசித்தாலும் வாழ்க்கை அதற்குப் பின் நன்றாக இருக்காது.

அப்படி நீ யோசிப்பாயா?

இப்போது எல்லாம் சொல்ல முடியாது நான் யோசிக்கலாம் அல்லது கணேஷ் யோசிக்கலாம். ஆனால் இப்படி எல்லாம் நடக்குமா என்று சொல்ல முடியாது? இன்னும் சொல்லப் போனால் நான்தான் இப்படி தடுமாறிக் கொண்டிருக்கிறேன். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. அவர் எனக்கு உதவி செய்கிறார். அவ்வளவுதான். அதற்கு மேல் அவர் எதையும் வெளிப்படையாக சொன்னதும் இல்லை. தன் உணர்வை காட்டியதும் இல்லை .நானாக ஏதேதோ கற்பனை செய்து கொண்டு எனக்குள் நானே தவித்துக் கொண்டிருக்கிறேன்.

சரி என்ன செய்வதாக இருக்கிறாய்?

எதுவும் இல்லை.

ஏன்?

நிஜமாகவே ஒன்றும் செய்வதாக இல்லை.

உனக்கு கணேசை பிடித்திருக்கிறதா தெளிவாக சொல்.

ம்

பிடித்திருக்கிறதா?

ஆம்

வாய்ப்பு கிடைத்தால் உன் மனதில் உள்ளதை கணேஷிடம் சொல்வாயா?

நிச்சயமாக சொல்ல மாட்டேன்.

ஏன்?

தெரியவில்லை ஆனால் நிச்சயமாக சொல்ல மாட்டேன்.

ஒருவேளை நீ சொல்லாமல் போனால் அவருக்கு உன் மீது பாசம் இருந்தாலும் அவரும் வெளிப்படுத்தாமல் போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறதே? உனக்கு புரிகிறதா?

ம்

பரவாயில்லையா?

பரவாயில்லை.

புவனா கோவிலை அடைந்திருந்தாள்.

சற்று தூரத்தில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்ததும் அருகில் வந்தாள்.

இது அனிதா. அவருடைய அக்கா பெண்.

அனிதாவின் அருகில் வந்த புவனா அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ஹலோ”

“வாங்கக்கா”

“இன்னிக்கு காலேஜ் போகலையா?”

“இல்லக்கா. உடம்பு சரியில்லை”

“என்னாச்சும்மா?”

“தெரியலக்கா காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு ஆனா வரல”

“சுடு தண்ணி குடிமா சரியாப் போயிடும் கிளைமேட் எல்லா இடத்திலயும் மாறுது”

புவனா பாசமாய் சொல்ல அனிதா ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள்.

“சரிக்கா”

“வா உள்ள போலாம்”

“சாமிக்கு திரை போட்டிருக்காங்கக்கா”

“சரி வா பிரகாரத்தை ஒரு முறை சுத்திட்டு வரலாம்” புவனா அழைக்க அனிதாவிற்கு மறுக்கத் தோன்றவில்லை. இருவரும் ஒன்றாக பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

சற்று நேரத்தில் அம்மனுக்கு போடப்பட்ட திரை விலக்கப்பட புவனா அனிதா இருவரும் கருவறைக்குள் நுழைந்தனர்.

பூசாரி கற்பூர ஆரத்தி காட்டினார்.

கற்பூரத் தட்டை இருவருக்கும் நீட்டியபடி சொன்னார்.

“அம்மனை நல்லா வேண்டிக்கங்க. உங்களுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும் “

பூசாரி சொல்ல புவனா அனிதா இருவரும் கண்களை மூடி மனதிற்குள் வேண்டிக் கொண்டனர்.

இருவரின் வேண்டுதலிலும் இடம் பெற்றான் கணேஷ்.

தொடரும்.

இப்போது ஆடியோ ஸ்டோரியாகவும் கேட்டு மகிழுங்கள்

 
Last edited:

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 10
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.